செல்போன் உற்பத்தியாளர்கள் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே செல்போன்களில் நிறுவுவது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் சஞ்சார் சாத்தி குறித்த விதிகளைத் திருத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சஞ்சார் சாத்தி செயலியை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் கட்டாயமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ‘சஞ்சார் சாத்தி’ செயலி வழியாக மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
இதனிடையே, மத்திய அரசு சஞ்சார் சாத்தியின் அம்சங்கள் குறித்தும் விளக்கியுள்ளது. மத்திய அரசு இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டாலும் கூட இந்த செயலிக்கு எதிர்ப்பு பரவலாக இருக்கிறது. அதுவும் ஆப்பிள் இன்க் நிறுவனம் இந்திய அரசின் இந்த உத்தரவு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக முன்கூட்டியே நிறுவப்பட வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

Leave your comments here...