மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு பதில் கேரளாவை சேர்ந்த சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் இணைக்க வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இவர் 2016ம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கேரளாவில் இருக்கும் ஒரேயொரு நாடாளுமன்ற எம்பி சுரேஷ் கோபி தான்.
இதனால் சுரேஷ் கோபிக்கு பிரதமர் மோடி மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்கினார். சுற்றுலா – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் மத்திய இணையமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
இதுதொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொண்டர்களிடம் பேசியதாவது:
நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளேன்.
அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...