தேவாலயத்தில் பணிபுரிந்த சிறுமி பலாத்கார வழக்கு : பாதிரியார் ராபின் வடக்கம்சேரி தண்டனை குறைப்பு

Scroll Down To Discover
Spread the love

கேரளாவில் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிறுமியை ராபின் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து, ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017ல் ராபினை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ராபின் வடக்கம்சேரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண் பிஷோரடி, ராபின் வடக்கம்சேரிக்கு, கீழ் நீதிமன்றம் விதித்த 20 ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே, ராபின் வடக்கம்சேரியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தற்போது, 18 வயது முடிந்துவிட்டது.

சமீபத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘என்னை பலாத்காரம் செய்த ராபின் வடக்கம்சேரியை திருமணம் செய்ய விரும்புகிறேன். அதனால், அவருக்கு, ‘ஜாமின்’ வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.