முதல்வர் ஸ்டாலின் திறந்த வைத்த மாம்பழத்துறையாறு அணை.. பராமரிப்பின்றிக் கிடக்கும் பூங்கா – நடவடிக்கை எடுப்பது யார்…?

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லுக்குறி  என்ற பாலத்தின் அருகே உள்ள அணைதான் மாம்பழத்துறையாறு அணை. மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம்.

மாம்பழத்துறை ஆறானது மருத்தூர் மலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 838 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி, பின்னர் கடல் மட்டத்தில் இருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ளது. தமிழகத்தில் கடைசியாக கட்டப்பட்ட அணை மாம்பழத்துறையாறு அணை. இது 2010 -11 ஆண்டில் திறக்கப்பட்டது.

மாம்பழத்துறையாற்றின் மூலம் குமரி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும், கல்குளம் தாலுகாவில் உள்ள 25 குளங்களும் நிரம்புவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரமும் சிறப்படையும் என்ற நோக்கில் கட்டப்பட்டது.  சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. மாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும்.

இது வில்லுக்குறியிலிருந்து ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. 80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிப் பெறுகின்றன.

தமிழக அரசால் 2007ம் ஆண்டு  20 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010-11 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இந்த  அணையை காண  சுற்றுலா பயணிகளும் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் மாம்பழத்துறையாறு அணை பராமரிப்பின்றியும் அணையை ஒட்டி இயற்கை அழகுடன் அமைக்கப்பட்ட பூங்கா தற்போது பராமரிப்பின்றி கிடப்பது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணையை பார்வையிட கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த அணையை 2010 ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாம்பழத்துறையாறு அணைப் பகுதியை இயற்கை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் விருப்பமாக உள்ளது.

News :  KaniyaKumari Harish