புகழ்மிக்க சிவாலயமான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..!
![புகழ்மிக்க சிவாலயமான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி..!](https://www.jananesan.com/wp-content/uploads/2020/06/Srikalahasti-Shiva-Temple.jpg)
ஆந்திராவிலுள்ள புகழ்மிக்க சிவாலயமான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று (ஜூன் 15)முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் சில தளர்வுகள் காரணமாக 8ந்தேதி முதல் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமலை ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க ஆந்திர அரசிடம் தேவஸ்தானம் அனுமதி கோரியது. ஆந்திர அரசும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் 10-ந்தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டர்கள். 11-ந்தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டர்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.
இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் உள்ள புகழ்மிக்க சிவாலயமான காளஹஸ்தி தலத்தில் இன்று முதல் பக்தர் அனுமதிக்கப்பட உள்ளனர்.சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் வாயுதலமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து பரிகார பூஜைகளை செய்து அருள்பெற்றுச்செல்கின்றனர். நாட்டின் அனைத்து கோவில்களிலும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஏற்படும்போது கிரகண காலத்தில் நடைசாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில்சூரிய மற்றும் சந்திர கிரகண நேரங்களில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு கிரகணக் கால அபிஷேகங்கள் நடத்தப்படுவது சிறப்புக்குரியதாகும்.
தற்போது சோதனை முறையில் முதலில் கோவில் ஊழியர்கள், செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். புதன்கிழமை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராகு கேது பூஜை மட்டும் நடைபெறும் என்றும் மற்ற பூஜைகளை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...