மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள்; பிரதமர் திறந்து வைக்கிறார்..!

இந்தியாதமிழகம்

மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள்; பிரதமர் திறந்து வைக்கிறார்..!

மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள்; பிரதமர் திறந்து வைக்கிறார்..!

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜன.,12) பிரதமர் மோடி காணொலி வாயிலாக 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,125 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டன. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.

அதனைத்தொடர்ந்து, இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 12ஆம் தேதி தமிழகம் வருகை தருவதாக இருந்தது. விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக இருந்தது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சுமார் 2145 கோடி ரூபாய் மத்திய அரசாலும் மீதி தமிழக அரசாலும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. இதன் மூலம் எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு 1450 இடங்கள் அதிகமாக கிடைக்கும். மலிவு விலையில் மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சியின் ஒருகட்டமாக இந்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.

மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும் தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவும் திட்டத்தின் கீழ், அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் முயற்சியாக இவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...