திருப்பதி கோவிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுவே பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் ஏழுமலையானை நீண்ட வரிசைகளில் காத்திருந்து தரிசிப்பர்.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பக்தர்களின் உண்டியல் காணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் ஏழுமலையானை 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் ரூ.1,365 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தி உள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.