மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநிலத்தில் வன்முறையைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு உட்பட மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 3) விசாரணைக்கு வந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரணை செய்தது.
அப்போது, மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள், நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் விவரங்கள், மணிப்பூரின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசு ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது.
வழக்கில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது அவர், “மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகிறது. அங்கு மாநில போலீஸ் தவிர மணிப்பூர் ரைபில்ஸ், மத்திய ஆயுதப் படைகள், ராணுவத்தின் 114-வது பிரிவு மற்றும் மணிப்பூர் கமாண்டோ படைகள் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் 24 மணி நேரமாக இருந்த ஊரடங்கு 5 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
குகி குழுக்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வ்ஸ், இந்த வழக்குக்கு வகுப்புவாத கோணம் வழங்கப்படக் கூடாது என்றும், குகிகளுக்கு எதிரான வன்முறைக்கு அரசு ஆதரவளித்தது என்றும் கூறினார்.

														
														
														
Leave your comments here...