சுதந்திரத்திற்கு பிறகு அதிக ஆண்டுகள் ஆட்சி : கிராமங்கள் மீது அக்கறை காட்டவில்லை : காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

சுதந்திரத்திற்கு பிறகு அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த அரசு, கிராமங்கள் மீது அக்கறை காட்டவில்லை என்றும், அதனால் மக்கள் அவர்களை புறக்கணித்ததாகவும் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவாவில் பஞ்சாயத் ராஜ் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: நாட்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்தாலும், அவற்றை நமது பஞ்சாயத்துகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துகின்றன. ஊராட்சிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பட்ஜெட், 2014க்கு பிறகு ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சி (காங்கிரஸ்) சிந்த்வாரா மக்களின் வளர்ச்சியில் ஒருபோதும் அக்கறையே காட்டவில்லை. அம்மக்களின் நம்பிக்கையை உடைத்தது. முந்தைய அரசுகள் கிராமங்கள் ஓட்டு வங்கியாக இல்லாததால் பணம் செலவழிக்க தயங்கின. அதனால்தான் மக்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். கிராமங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் வளர்ச்சிக்காக நமது கருவூலத்தை பா.ஜ., திறந்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.