விசாரணை கைதி மரணம் : ஆய்வாளர் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட்..!

Scroll Down To Discover
Spread the love

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்ற ராஜசேகர் (வயது 31). இவர், பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார். இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 22-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக ராஜசேகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்வதற்காக போலீசார் ராஜசேகரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி அறிந்த ராஜசேகரின் உறவினர்கள், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி முன்பு திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணை கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.