கொடைக்கானலுக்கு சுற்றுலா : 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்….. குழந்தை உள்பட மூவர் உயிரிழந்த சோகம்..!

Scroll Down To Discover
Spread the love

தீபாவளிக்கு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோகுல். இவர் அவரது மனைவி நந்தினி, குழந்தைகள் தண்யா, கார்த்தி மற்றும் அவரது மாமியார் அழகுராணி ஆகியோர்களுடன் தீபாவளி பண்டிகைக்காக கொடைக்கானல் சுற்றுலா சென்று விட்டு நேற்று இரவு சொந்த ஊர் திரும்பினார்.

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக வந்து கொண்டிருந்தார். தற்போது பெய்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையாலும், மேகமூட்டம் காரணமாக சாலை சரியாக தெரியாத காரணத்தினால் வழக்கறிஞர் கோகுல் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு, காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வழக்கறிஞர் கோகுல் பலத்த காயத்துடனும் அவரது மகன் கார்த்தி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வழக்கறிஞரின் கோகுலின் மனைவி நந்தினி, குழந்தை தண்யா மற்றும் மாமியார் அழகு ராணி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுலா சென்றவர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.