விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் அமைப்பான கானா தொண்டு நிறுவனம் சார்பாக, 50 படுக்கைகள் மற்றும் மெத்தைகள் வழங்கப்பட்டது.
சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு, தொண்டு நிறுவனம் வழங்கிய 50 படுக்கைகளை, அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதல்வரின் வேண்டுகோளையடுத்து, அரசுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆதரவற்றவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகன வசதி ஏற்படுத்துதல், மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு பணிகளில் ஆர்வமுடன் இணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு நன்றி தெரிவிக்கிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களும் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர்.மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: Ravi Chandran

														
														
														
Leave your comments here...