உலகளவில் அதிவிரைவாக 18 நாட்களில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இந்தியா சாதனை.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. 40 லட்சம் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி உலகளவில் அதி விரைவாக இந்த இலக்கை எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.நம் நாடு வெறும் 18 நாட்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளது.

பிப்ரவரி 1-ஆம் தேதிவரை அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 தடுப்பூசிகளைப் பயனாளிகளுக்கு வழங்கிய முதல் ஐந்து நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடர்ந்து மிக வேகமாக செயல்படுகிறது.கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் இதர துறைகளிலும் இந்தியா வெற்றியடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவுகள், லடாக் (யூனியன் பிரதேசம்), சிக்கிம், மணிப்பூர், புதுச்சேரி, கோவா, ஒடிசா, அசாம் ஆகிய 14 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,60,057 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.5 சதவீதத்திற்கும் குறைவானதேயாகும் (1.49%). கடந்த 24 மணி நேரத்தில் 11,039 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. கடந்த ஏழு மாதங்களில் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடுகையில் நாள்தோறும் ஏற்படும் பாதிப்புகளை விட மிகவும் குறைவானது. கடந்த 24 மணி நேரத்தில் 14,225 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்தமாக 1,04,62,631 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் அதிகமாக குணமடைந்தவரின் வீதம் (97.08%) இந்தியாவில் பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 3, 2021 காலை 8 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 1,20,745 & புதுச்சேரியில் 3,077 பேர் உட்பட இதுவரை 41 லட்சத்திற்கும் அதிகமான (41,38,918) பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,845 முகாம்களில் 1,88,762 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 76,576 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அன்றாடம் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.

புதிதாக குணமடைந்தவர்களில் 85.62 சதவீதத்தினர் 8 மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். கேரளாவில்தான் அதிகபட்சமாக 5,747 பேர் குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,011 பேரும், தமிழகத்தில் 521 பேரும் குணமடைந்துள்ளனர்.தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,716 பேரும், மகாராஷ்டிராவில் 1,927 பேரும், தமிழகத்தில் 510 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 110 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.