ஜிஎஸ்டி இழப்பீடு தொகை: மாநிலங்களுக்கு 14-வது தவணையாக ரூ.6,000 கோடியை வழங்கியது மத்திய அரசு

Scroll Down To Discover
Spread the love

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 14-வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.

இவற்றில் ரூ.5,516.60 கோடி ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி). மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.

தற்போது, 76 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.76,616.16 கோடி மாநிலங்களுக்கும், ரூ.7,383.84 கோடி, சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி முறையை அமல்படுத்தியதால் ரூ.1.10 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்பு சாளரம் ஒன்றின் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சார்பாக இந்த சிறப்பு சாளரத்தின் வாயிலாக இந்திய அரசு கடன்களைப் பெறுகிறது. 2020 அக்டோபர் 23-ஆம் தேதி முதல் இதுவரை 14 கட்டங்களாக கடன்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகம், பிப்ரவரி 1-ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடியை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.5229.92 கோடி திரட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.565.54 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.