சதுரகிரி மலையில் பௌர்ணமி தரிசனத்திற்காக குவிந்த பக்தர்கள்.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் சதுரகிரி மலை, சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலை மேல் இருக்கும் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

இன்று பௌர்ணமி தரிசனத்திற்காக அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்குச் செல்லும் நுழைவு வாசல் முன்பு காத்திருந்தனர். காலை 6 மணியிலிருந்து பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகம் உள்ள நிலையில், பாதுகாப்பு பணிகளுக்காக போதிய அளவு போலீசார் அங்கு இல்லை. இதனால் சிறிது நேரம் பக்தர்கள் கூட்டம் நெரிசலில் சிக்கி திணறியது. பின்பு கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு, பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக மலைப் பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மலைக்குச் செல்லும் பக்தர்கள் மாலைக்குள் அடிவாரப் பகுதிக்கு திரும்பிவிட வேண்டும் என வனத்துறையினர் கூறி வருகின்றனர். மலைப்பகுதியில் போதிய அளவு போலீசாரும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் மீட்பு பணிகளை செய்ய தீயணைப்பு வீரர்கள் இல்லாத நிலையே உள்ளது என பக்தர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.