தமிழகத்தின் பாரம்பரியம், தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை திமுக ஆட்சியில் அவமதிக்கப்படுகிறது, என பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் குற்றம் சாட்டியுள்ளார்.
2 நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், வடவள்ளி பகுதியில் நடைபெற்ற ‘மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். கோவை மருதமலையில் சுவாமி தரிசனம் செய்தார். பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்ற நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட இருவரும், பெண்களுடன் இணைந்து கும்மி பாட்டுக்கு நடனமாடினர்.
விழாவுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்திருந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், அங்கிருந்த தாய்மார்களிடம் பொங்கல் வைப்பதன் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து வீர விளையாட்டுகள் பற்றியும் அறிந்துகொண்ட அவர், உறியடித்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினர். மேலும், வள்ளி – கும்மி, தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் ஆர்வமுடன் கண்டு ரசித்தார்
https://x.com/NitinNabin/status/2010281866117693684?s=20
பின்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி.
1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார். இன்று பிரதமர் மோடி அவர்களும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார்.
காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது. மாண்புமிகு பிரதமர் அவர்களின் தலைமையில், ராமர் கோவில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது.
இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும். ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழகம்..! வளர்க பாரதம்..!

Leave your comments here...