வெளியே சுற்றினால் கைது – முக்கிய சாலைகள் மூடல் ; சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று முதல் முழு ஊரடங்கு அமல் .!

தமிழகம்

வெளியே சுற்றினால் கைது – முக்கிய சாலைகள் மூடல் ; சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று முதல் முழு ஊரடங்கு அமல் .!

வெளியே சுற்றினால் கைது –  முக்கிய சாலைகள் மூடல் ; சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு  இன்று முதல் முழு ஊரடங்கு அமல் .!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வாகனங்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலை மற்றும் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அனுமதி இல்லாமல் சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. சென்னையில் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. அன்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ளன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இன்று அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி இரவு 12 மணி வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

* சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் பூவிருந்தவல்லி, ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சிகளிலும் நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.

* அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.

* இந்த பன்னிரண்டு நாட்களில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு எந்த தடையும் இல்லை.

* சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

* மத்திய மாநில அரசு துறை சார்ந்த பணிகளை 33 சதவீத பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.

* வாடகை ஆட்டோ, டாக்ஸி ஆகியவை இயங்க அனுமதி இல்லை. அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

* ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அந்த பகுதிகளில் ரேசன் ஊழியர்கள் நேரில் சென்று நிவாரணத்தை வழங்குவார்கள்.

* காய்கரி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீ தூரம் வரை மட்டுமே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதி.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். தொண்டு நிறுவனங்கள் அரசிடம் முறையான அனுமதி பெற்று இயங்க அனுமதி.

* நீதிமன்றம், நீதித்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். ஊடகத்துறை சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி வழங்கப்படுகிறது.

* வங்கிகள் 29, 30 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டும் 33 சதவீத பணியாளர்களோடு செயல்படும். ஏ.டி.எம் எந்திரங்கள் செயல்படும்.

* கட்டுமான தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கி இருந்து பணி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

* திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்.

Leave your comments here...