கந்தர்வகோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான பெண் மந்திரவாதி கைது.!
- June 4, 2020
- jananesan
- : 1385
- Pudukottai
![கந்தர்வகோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான பெண் மந்திரவாதி கைது.!](https://www.jananesan.com/wp-content/uploads/2020/06/pudukotta-girl-murder-e1591261245376.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் வித்யா. இவர் கடந்த மாதம் 18ம் தேதி வீடு அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் தேடிச் சென்றனர். அப்போது அருகில் உள்ள தைலமரக் காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வித்யா காயங்களுடன் கிடந்தார்.இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். வித்யாவின் உடைகள் கிழிக்கப்பட்டு சிதறிக்கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. இந்நிலையில், சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் போலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது. பன்னீர்செல்வம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவரிடம் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிரடி திருப்பமாக அவளது தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காக பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, மகளை நரபலி கொடுத்ததாக போலீசாரிடம் பன்னீர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். பெற்ற மகளை தந்தை நரபலி கொடுத்தது போலீசாருக்கு மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கைதான 2 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் தங்களது புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோர் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த பெண் மந்திரவாதி உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகாயி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Leave your comments here...