கொரோனா தடுப்பு பணிகள்; ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
![கொரோனா தடுப்பு பணிகள்; ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை](https://www.jananesan.com/wp-content/uploads/2020/05/IMG-20200511-WA0005.jpg)
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,939 லிருந்து 67,152 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 19,358 லிருந்து 20,917 ஆக அதிகரித்துள்ளது. 44,029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட துவங்கிய பின் தற்போது தான் முதன்முறையாக 4,213 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 24 ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. மூன்று முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 ல் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர, மற்ற அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், பொருளாதாரம் பெரும் சரிவை கண்டு உள்ளது. வரும் 17 ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். 5வது முறையாக இந்த கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும். மே 31 ஆம் தேதி வரை சென்னைக்கு ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும் நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் தானியங்களை இலவசமாக தர வேண்டும்’என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
Leave your comments here...