ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் நிலம் மீட்பு: ஆண்டுக்கு 1கோடி ரூபாய் வருவாய் வரும் ரப்பர் தோட்டம்..!
![ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் நிலம் மீட்பு: ஆண்டுக்கு 1கோடி ரூபாய் வருவாய் வரும் ரப்பர் தோட்டம்..!](https://www.jananesan.com/wp-content/uploads/2020/01/WhatsApp-Image-2020-01-21-at-10.29.27-AM.jpeg)
108 வைணவ தலங்களில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலும் ஒன்றாகும். 8-ம் நூற்றாண்டிற்கு முந்தைய பழமையான கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் கோதையாறும், பரளியாறும் வட்டமிடுவதால் திருவட்டார் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பரப்பளவு 3.23 ஏக்கர் ஆகும். மூலவர் ஆதிகேசவப்பெருமாள் 22 அடி நீளத்தில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக கோயில் அருகே ஆனையடி பகுதியில் 100 ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்த நிலம் தனியார் சிலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.இந்த தோட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான அந்த இடம் மீட்கப்பட்ட ஆனையடி பண்ணை ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி தொடக்க விழா நடந்தது.
இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு ரப்பர் பால் உற்பத்தியை தொடங்கி வைத்து பேசிய அவர்:-
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 83.5 ஏக்கர் நிலம் தனியார் சிலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதனால் கோவிலுக்கு வருமானம் இல்லாமல் இருந்து வந்தது. 2011-ம் ஆண்டு அந்த நிலம் மீட்கப்பட்டு, வைகுண்டா நிறுவனத்தால் 48 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்டமாக ரப்பர் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு, இன்று (நேற்று) முதல் வைகுண்டா நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ரப்பர் பால் பண்ணை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பண்ணையில் மற்ற இடங்களிலும் ரப்பர் மரம் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ரப்பர் மரங்கள் மூலம் 2021-ம் ஆண்டு முதல் முழு அளவில் ரப்பர் பால் உற்பத்தி செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைக்கும்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் சிவ.குற்றாலம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் ஜெயசுதர்சன், அறங்காவலர் குழு உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Leave your comments here...