மத்தியிலும் மாநிலத்திலும் கோலோச்சும்…. ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு

அரசியல்இந்தியா

மத்தியிலும் மாநிலத்திலும் கோலோச்சும்…. ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு

மத்தியிலும் மாநிலத்திலும் கோலோச்சும்….  ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதோடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றது.

இதில், ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி Vs எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி + பா.ஜ.க + ஜன சேனா கட்சி Vs ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது.

இங்கு கடந்த தேர்தலின்போது மக்களவைத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி என ஒன்றைக்கூட கைப்பற்றாத பா.ஜ.க, இந்த முறை தனது முக்கிய பிரசாரமாக `இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை நீக்குவோம்’ என்ற முழக்கத்தைப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாயிலாக முன்வைத்தது. பா.ஜ.க-வின் இந்த முழக்கமே கூட்டணியிலிருக்கும்… கடந்த முறை 3 மக்களவைத் தொகுதிகள், 23 சட்டமன்றத் தொகுதிகளில் வென்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மாநில சிறுபான்மையினர் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு சிறையிலடைக்கப்பட்டதும் விவாதப்பொருளானது.

மறுபக்கம், கடந்த தேர்தலில் 22 மக்களவைத் தொகுதிகள், 151 சட்டமன்றத் தொகுதிகள் வென்ற ஜெகன்மோகன் ரெட்டி, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய இட ஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்’ எனக் கூறிவந்தார். இன்னொருபக்கம், பா.ஜ.க-வைப்போலவே ஆந்திராவில் தங்களின் எண்ணிக்கையைத் தொடங்க ஷர்மிளாவை முன்னிறுத்தி காங்கிரஸ் களமிறங்கியிருக்கிறது.

இப்படியான மும்முனைப் போட்டிகளுக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 131 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், மற்றவை 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் பாஜகவும், ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களும் எதிரெதிர் கூட்டணியில் இருந்து ஆட்களை இழுப்பதற்கான வேலைகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் கிங்மேக்கராக சந்திரபாபு நாயுடு மாற வாய்ப்புள்ளது.

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடுவின் உதவியை பாஜக பெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் சந்திரபாபு நாயுடுவுக்கு கர்நாடகா துணை முதல்வரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் போனில் பேசியுள்ளார். அப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்து ‛இந்தியா’ கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அதோடு மத்தியில் ஆளும் கட்சியாக ‛இந்தியா’ கூட்டணி பொறுப்பேற்கும்போது மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்களை தருவதாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.முன்னதாக ‛இந்தியா’ கூட்டணியின் மிக மூத்த தலைவரான சரத்பவார், சந்திரபாபு நாயுடுவுடன் பேசி அவரை ‛இந்தியா’ கூட்டணிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது டிகே சிவக்குமார் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருப்பாரா, இல்லாவிட்டால் ‛இந்தியா’ கூட்டணிக்கு எஸ்கேப் ஆவாரா என்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave your comments here...