மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு..? தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள்..!

தமிழகம்

மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு..? தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள்..!

மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு..? தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து வருகை தந்தனர்.  காலை 10 மணியளவில் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற திருக்குறளுடன் வேளாண்  பட்ஜெட் உரையை துவங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

பட்ஜெட்டை  தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ. 42,282 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு கொண்ட

இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் முழுமையாக…

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்:

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் (CM MK MKS) – ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.

2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம். நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ. 5 கோடி மானியம்.

தலா 37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.

5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் 10 லட்சம் ஏக்கருக்கு, 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிட ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடு.

2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ. 6.27 கோடி நிதி ஒதுக்கீடு

ரசாயனங்களின் பயன்பாட்டினைக் குறைத்து மண்நலம் காக்க “வயல் சூழல் ஆய்வு” அடிப்படையில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளும் பரிந்துரைகளும் வழங்குதல்.

அசாடிராக்டின் பயன்பாட்டுக்காக வேம்பினைப் பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை 50 லட்சம் எண்கள் தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்ல சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள், 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட விதை விநியோகம்.

200 மெட்ரின் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள விதை விநியோகம் செய்திட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பாரம்பரிய சிறுதானியங்கள், பயறு வகைகளின் ரகங்களின் விதைகளை அரசு மாநில விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து புதிய ரகங்களை உருவாக்கிடவும் பயன்பாட்டிலுள்ள ரகங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

உயிர்ம வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வட்டாரத்துக்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ. 38 லட்சம் நிதிஒதுக்கீடு.

முழுமையான உயிர்ம சான்றுடன் கூடிய உயிர்ம வேளாண்மையை உறுதி செய்து விதைப்பு முதல் நேரடி சந்தைப்படுத்துதல் வரை வாய்ப்புகளை உருவாக்கி, விவசாயிகள் கூடுதல் லாபம் பெற்றிட 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதிஒதுக்கீடு.

உயிர்ம வேளாண்மைக்குத் தேவையான இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க 100 குழுக்களுக்கு ரூ. 1 கோடி நிதிஒதுக்கீடு.

வேளாண்காடுகள் திட்டத்தில் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய நாற்றங்கால்களை அமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ரூ. 13 கோடி நிதி ஒதுக்கீடு.

பயிர் சாகுபடியுடன் கூடிய கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்தல், பழ மரங்கள், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

மானாவாரி நிலங்களில் விவசாயிகள் லாபகரமான பயிர் சாகுபடி மேற்கொள்ள மூன்று லட்சம் ஏக்கரில் உழவு மேற்கொள்ளவும், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் பயிரிட விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

வீட்டுத் தோட்டத்தில் ஊட்டச்சத்துமிக்க பழங்கள், காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற செடிகள் வழங்க ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு.

மக்கள் உடல்நலம் பேணும் தேன் பொருட்களுக்கு கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்புப் பயிற்சிகள் அளித்திட ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கி, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து, விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பரவலாக்கம் செய்திட ரூ. 1.48 கோடி நிதி ஒதுக்கீடு.

பயிர்க்கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களை வேகமாகச் சிதைத்து கரிமச்சத்தின் அளவை உயர்த்தி, கிடைக்காத நிலையிலுள்ள சத்துகள் கிடைக்கப் பெறவும், பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிடவும் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் செயல்திறனை மதிப்பிட ரூ. 1. 39 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய 100 உழவர் அங்காடிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தேர்வு செய்யப்பட்ட 2482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு .

தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட வேளாண் பயிர்களில் பரப்பு விரிவாக்கம் செய்திட ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு

பயறு பெருக்குத் திட்டம், 4.75 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்திட ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கீடு.

துவரை சாகுபடிப் பரப்பு குறைந்துவரும் மாவட்டங்களில், துவரை சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க 50,000 ஏக்கர் பரப்பில், துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவு எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் விதமாக எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடியை 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக்கம் செய்திட, ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.

எள் சாகுபடிப் பரப்பு, மகசூலை அதிகரித்திட, எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்க திட்டம் 25,000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.

சூரியகாந்தி பயிரின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட, சூரியகாந்தி சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டம் 12,500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

1,500 ஏக்கர் பரப்பளவில், வீரிய ஒட்டு ரக ஆமணக்கு சாகுபடியை ஊக்குவித்திட ஆமணக்கு சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு.

பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம் – ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு:

விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் 15,810 மெட்ரிக் டன் தரமான நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து விதைகள் 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு.

பிற மாநில உயர் விளைச்சல் தரக்கூடிய நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகளின் சான்று பெற்ற விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

50,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில், 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

துத்தநாக சல்பேட், ஜிப்சம் உரங்கள் 4 லட்சம் ஏக்கர் நெல் பரப்புக்கு விநியோகித்திட ரூ.9 கோடி மானியம்.

2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பரப்பில் நுண்ணூட்ட உரக் கலவை, வழங்கிட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர் – விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைத்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்:

விவசாயிகளுக்குப் பரிசு: மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு.

நெற் பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப்பயிர் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி மானியம்.

பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கிட, ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம், 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

பயிர் சாகுபடியில் அதிக உற்பத்தியும் அதிக வருமானமும் பெற, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க 2,482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கிட ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு.

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ”நம்மாழ்வார் விருது” வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு,

ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத் தொகை வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.

பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட ”பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு’’ ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு

இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் .

வேளாண் மேம்பாட்டு பயிற்சிகள்: பணித்திறனையும், தொழில்நுட்ப அறிவினையும் மேம்படுத்தி, வேளாண் மேம்பாட்டினை எய்தும் வண்ணம் விவசாயிகளுக்கும், படித்த இளைஞர்களுக்கும், அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கிட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு

சர்க்கரைத் துறை:

2023-2024 அரவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை: மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் முன் எப்போதும் இல்லாத அளவில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம்: கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புடைய அதிக சர்க்கரைக் கட்டுமானம் தரக்கூடிய புதிய கரும்பு ரக விதைகள் வழங்கிட ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நவீன கரும்பு எடைமேடைகள், சுழல் கவிழ்ப்பான், சிமெண்ட் கான்கிரீட் கரும்புதளங்கள், கழிவுமண் மக்கவைக்கும் களங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ. 12.51 கோடி நிதி ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்துதல் – ரூ. 12.40 கோடி நிதி

பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம், மதுராந்தகம், சுப்பிரமணிய சிவா ஆகிய சர்க்கரை ஆலைகளில் ஆலை அரவை பகுதி தானியங்கிமயமாக்கிட ரூ.3.6 கோடி.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை நிறுத்தம் ஏற்படுவதை தவிர்த்திட புதிய டர்பைன் ரோட்டர் அசெம்பிளி அமைத்திட ரூ.6.31 கோடி.

எம்.ஆர்.கே, செய்யாறு ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு அரவை இயந்திரத்தின் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் கருவி வாங்கிட ரூ.1.10 கோடி.

செங்கல்ராயன், வேலூர், செய்யாறு, அறிஞர் அண்ணா, பெரம்பலூர், தர்மபுரி, எம்.ஆர்.கே ஆகிய சர்க்கரை ஆலைகளில் நீர் சுத்திகரிப்பு நிலைய அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்றி நிறுவிட ரூ.1.39 கோடி.

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை:

நுண்ணீர்ப்பாசனம்: பாசன நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், பயிரின் உற்பத்தி, உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ரூ. 773.23 கோடி நிதி ஒதுக்கீடு. நிலத்தடி நீர் அதிகமாகக் குறைந்து வரும் குறு வட்டங்களுக்கு முக்கியத்துவம்.

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்: தென்னங்கன்றுகள் வழங்கவும், ஊடுப்பயிர் சாகுபடி மேற்கொள்ளவும், தென்னை நாற்றங்கால்கள் அமைத்தல், பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தித்திறன் அதிகரிக்க செயல்விளக்கத்திடல், பரப்பு விரிவாக்கம், கேரளா வாடல் நோய், வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு, மதிப்புக்கூட்டுதல் பயிற்சி போன்றவற்றிற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

நீர் பயன்பாட்டினை சிக்கனப்படுத்தி, வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய பயிர்களுக்கு ரூ.3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் ரூ.2.70 கோடி மானியத்தில் வழங்கப்படும்.

தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க 12 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்களுக்காகவும் ரூ. 27.5 கோடி நிதி ஒதுக்கீடு.

தோட்டக்கலைப் பண்ணை இயந்திர கண்காட்சி: தோட்டக்கலைப் பயிர்களில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை வரை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட கண்காட்சி ஒன்று நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ.41.35 கோடி ஒதுக்கீடு.

மா: தென்னாட்டு மா ரகங்கள், ஏற்றுமதிக்கு உகந்த மா ரகங்கள் பரப்பினை விரிவாக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க மானியம் வழங்கவும், கிளை மேலாண்மை பயிற்சியளிக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான செயல்விளக்கத்திடல்கள் அமைக்கவும் ரூ. 27. 48 கோடி நிதி ஒதுக்கீடு.

வாழை: ரூ. 12. 73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம், வாழைத்தார் உறைகள் வழங்க மானியம்.

பலாவில் உள்ளூர், புதிய ரகங்களின் சாகுபடி, சாகுபடித் தொழிநுட்பங்கள் குறித்த பயிற்சி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ. 1.14 கோடி நிதி ஒதுக்கீடு

குளிர் மண்டலப் பழப்பயிர்களான பிளம்ஸ், பேரிக்காய் ஆகியவற்றின் தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரித்திட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

ஐந்திணை நிலங்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்த முல்லை, மருத நிலப்பூங்காக்கள், கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம், தென்காசி-நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைப்பதற்காகவும், உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யவும் ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு.

செங்காந்தள், மருந்துக்கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.

முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட, இயற்கை இடுபொருள் செயல்விளக்கம் அமைத்திட ரூ. 3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டம்: தரிசு நிலப் பகுதியிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியும் தானியங்கள் அறுவடைக்குப் பின் மிளகாய் பயிரிடுவதை ஊக்குவிக்கவும், 200 பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும்

ரூ. 3.67 கோடி நிதி ஒதுக்கீடு.

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ. 1 கோடி ஒதுக்கீடு.

பேரீச்சையில் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ. 30 இலட்சம் ஒதுக்கீடு.

கொய்யாவில் பழ ஈ பூச்சி மேலாண்மைக்காக ரூ. 50 இலட்சம் ஒதுக்கீடு.

விவசாயிகள் நிரந்தரப் பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன், சுரை போன்ற கொடி வகைக் காய்கறிகள் பயிரிடுவதற்காக ரூ. 9.40 கோடி மானியம்.

பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து அந்த ரகங்களை ஊக்குவிக்கவும், பரப்பு விரிவாக்கம் செய்யவும் ரூ. 2 கோடி ஒதுக்கீடு.

முக்கிய சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பத்து அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நேரடி விற்பனை மையங்கள் அமைத்திட ரூ. 1 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளின் தொழில்நுட்ப செயல்திறனை மேம்படுத்த தோட்டக்கலைப் பயிர்களில், அனைத்துத்திட்ட ஒருங்கிணைந்த செயல்விளக்கம் வட்டாரந்தோறும் அமைக்கப்படும்.

தொகுப்புமுறை சாகுபடி: மல்லிகை, பலா, மிளகாய், கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் தொகுப்புமுறை சாகுபடியினை ஊக்குவிக்க தோட்டக்கலை வல்லுநர்களால் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.

> அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான திட்டங்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் போன்ற தகவல்களை, விவசாயிகள் எளிதில் அறியும் வண்ணம் தகவல் மையம் அமைக்கப்படும்.

> பருவமில்லா காலங்களிலும் முருங்கை உற்பத்தியினை ஊக்குவிக்க முதற்கட்டமாக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நெகிழி விரிப்பான் கொண்டு முருங்கை மரத்தினை மூடும் தொழில்நுட்பம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறை:

வேளாண் இயந்திரமயமாக்குதல்: வேளாண்மையில் இயந்திரமயாக்குதலின் அவசியத்தை உணர்ந்து, சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பயன்பெறும் வகையில் 26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ. 170 கோடி நிதி ஒதுக்கீடு.

எளியோர்க்கென இயந்திர வாடகை மையங்கள்: விவசாயிகளிடையே அதிகரித்து வரும் வேளாண் இயந்திரத் தேவையினை நிவர்த்தி செய்து, உயர்மதிப்பு வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டினை ஊக்குவிக்க, 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ 32.9 கோடி நிதி ஒதுக்கீடு, “தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி” உருவாக்கிட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திர வாடகை திட்டத்தினை வலுப்படுத்திட புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதலுக்காக ரூ. 28.82 கோடி நிதி ஒதுக்கீடு.

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்கிடக் கூடுதல் மானியம்: வேளாண் பணிகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில் நெல் நாற்று நடவு இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வாங்கிட, கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கிட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள்: நெல்லை குறித்த காலத்தில் உலர வைத்து, நெல்லின் சேமிப்பு காலத்தினை அதிகரித்திட, 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திரங்களைப் பரவலாக்குதலுக்கான நடவடிக்கைகள்: விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், டிராக்டர்கள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தப்படும். வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடர்பான தொழில்நுட்பக் கையேடு தயார் செய்யப்பட்டு, அனைத்து கள அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் பகிரப்படும்.

நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் செயல்விளக்கம்: நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகளை அரசு இயந்திர கலப்பைப் பணிமனைகளில் தயாரித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

சூரிய சக்தி மின்வேலிகள்: விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிர்களைக் காத்திடும் நோக்கில் விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைத்தல், பராமரித்தல்: பல்வேறு நீர்வடிப்பகுதிகளில் 100 புதிய நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைப்பதற்கும், 500 நீர்சேகரிப்புக் கட்டமைப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கும் ரூ. 2.75 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்டா மாவட்டங்களில் “சி”, “ டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாருதல்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் “சி”, “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியியல் துறையும், வேளாண் அறிவியல் நிலையங்களும் இணைந்து விவசாயிகளுக்கு மழை நீர் சேகரிப்பு முறைகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு.

வேளாண்மை விற்பனை – வேளாண் வணிகத் துறை:

திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தேனி ஆகிய 10 மாவட்ட ஒழுங்குமுறை

விற்பனைக்கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் ஐந்து மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும், எட்டு மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்களும் அமைக்க ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீடு .

சென்னையிலும், கோவையிலும், விவசாயிகள் விளைபொருட்களைத் திறம்பட சந்தைப்படுத்தி அதிக வருவாய் பெறும் வகையில், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்குப் பொது முத்திரை, சிப்பமிடல் வசதிகள் அமைக்க ரூ. 4.10 கோடி நிதி ஒதுக்கீடு .

ரூ. 16.13 கோடியில் பலாவில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்திட ஏதுவாக பலா மதிப்புக்கூட்டுதலுக்கான மையம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் ரூ. 4 கோடியில் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பித்தல்: 100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பிக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.

நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு.

அப்பீடா (APEDA) பயிற்சி பெற்ற நூறு விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான உரிய சான்றிதழ்களைப் பெற்றுத் தரும் பொருட்டு, ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு.

இணையவழி வர்த்தக நிறுவனங்களுடன் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்குமான இணைப்பினை ஏற்படுத்தி விளைபொருட்களை விற்பனை செய்ய புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வேளாண் வணிக மேம்பாட்டுக்காக சமூக வலைத்தளக்குழுக்கள் உருவாக்கப்படும், வட்டாரத்துக்கு இரண்டு கிராமங்கள் வீதம் வீதம் மாதம் ஒன்றுக்கு 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

பண்ணை வழி வர்த்தகம் : விவசாயிகளின் சிறந்த விலை கிடைக்க ரூ. 60 கோடி மதிப்பிலான விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை.

பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு: விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பொருட்களை இருப்பு வைத்துப் பெறும் பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு.

100 சேமிப்பு கிடங்குகளுக்கு கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற வழிவகை

புத்தாக்க நிறுவனங்களை (Start-up) ஊக்குவித்தல்: வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் தகுதியுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் கண்காட்சிகள்: விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும்.

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறைக்கு:

கரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு வளாகம்

கோயம்புத்தூரில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம்

தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு உயிர்ம நிலையை அடைந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஆறு விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு NABL தரச்சான்று

எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டண மானியம். ஆகியவற்றுக்கு 2024-2025-ஆம் ஆண்டில் 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச்செய்யும் வகையில் புதிய பதிவு முறை நடைமுறை அறிமுகம்

தரமான பழமரக்கன்றுகள், காய்கறிப் பயிர் நாற்றுகள் கிடைப்பதை விதைச்சட்டத்தின்படி உறுதி செய்தல்

வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் தரமாக விவசாயிகளுக்குக் கிடைப்பதை சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப்பரிசோதனை போன்ற நடவடிக்கைகளுடன் உறுதி செய்தல்.

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை: பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்:

கிராமப்புர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட தோட்டக்கலைப் பயிர்களுக்கு வேளாண் இடுப்பொருட்களைத் துல்லியமாகத் தெளிக்கும் தொழில்நுட்பம், பயிற்சி, செயல் விளக்கத் திடல்கள் ஏற்படுத்துதல்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, சத்துக்கள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்களை துரித இனப்பெருக்கம் மூலம் உருவாக்க ஆராய்ச்சிப்பணிகள்.

மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம் ஆகிய பயிர் சாகுபடியில் இயந்திரமயமாக்குவதற்கு சாத்தியக்கூறு சோதனை

நிலசம்பங்கி, செவ்வந்தி, ரோஜாவில் புதிய இரகங்களுக்கான ஆராய்ச்சி பணிகள். ஆகியன ரூ.5 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்

தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX) என்ற தனி அமைப்பின் மூலம், தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முதன்மை பதப்படுத்தும் மையங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள்

வேளாண் தொழில் பெருந்தடமான தஞ்சாவூரில் வேளாண் விளை பொருட்கள், கழிவுகளிலிருந்து ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள மூலக்கூறுகளைப் பிரித்தெடுப்பதற்கான கட்டமைப்புகள்

கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் ஏற்றுமதி தரப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குவதற்கான உணவுப்பரிசோதனை ஆய்வகங்கள்

அரிசி, மா, வாழை, கொய்யா, தக்காளி, மிளகாய் போன்ற வேளாண் விளைபொருட்களுக்கும், கடல் சார் மீன் பொருட்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகள் உருவாக்குதல் என, TNAPEX இன் திட்டங்கள் மொத்தம் ரூ. 72 கோடியில் செயல்படுத்தப்படும்.

கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு:

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு, பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

கடன் ஒப்பளிப்பு வழங்கும் நேரம் குறைக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மைக்காக தொடக்க வேளாண்மை

கூட்டுறவு வங்கிகள் ரூ. 141 கோடி மதிப்பீட்டில் கணினிமயமாக்கல் பணிகள்.

2,609 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவைச் சங்கங்களாக செயல்பட இதுவரை ரூ. 341 கோடி விடுவிப்பு.

1,380 வேளாண் இயந்திரங்கள் இ-வாடகை (உழவன் செயலி) மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

நாட்டிலேயே முதன்முறையாக கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்பு (UPI) அறிமுகப்படுத்தப்பட்டு, UPI, NEFT உள்ளிட்ட மின்னணு வங்கியியல் சேவைகள் மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன் பெறுகின்றனர்.

ஆறு புதிய நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளன.

250 மெட்ரிக் டன் கொள்ளவிலான நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

நீர்வளத்துறை: தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ரூ 110 கோடியில், 919 பணிகள்.

கால்நடை பராமரிப்பு: பசுந்தீவன ஊடுபயிர் செய்து பால் உற்பத்தியை உயர்த்திட 5,000 ஏக்கர் பரப்பிற்கு ரூ. 2 கோடி மானியம்.

மீன்வளம்: மீன்வளர்ப்போரின் வருவாய் உயர்வதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரித்திட புதிதாக நன்னீர்
மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல், இடுபொருள் மானியம், மீன்தீவன ஆலை போன்ற திட்டங்களுக்காக ரூ.4.60 கோடி மானியம்.

ஊரக வளர்ச்சி: இயற்கைவள மேம்பாட்டுப்பணிகள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத் தண்டுகள், அமிழ்நீர் குட்டை, கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இயற்கைவள மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு.

தென்னை நாற்றுப்பண்ணைகள்: தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைபில் ஆர்வமுள்ள, பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு.

விதை உற்பத்தி தொகுப்புகள்பயறு வகைகள், எண்ணெய்வித்துகளில், 100 விதை உற்பத்தித் தொகுப்புகள் அமைத்து, பயிற்சியுடன் விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம்.

எரிசக்தித் துறை: 23.51 இலட்சம் வேளாண் பாசன இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ. 7,280 கோடி நிதி ஒதுக்கீடு.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை:

தருமபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி நிதி ஒதுக்கீடு.

மின்னணு முறையிலான பயிராய்வு செய்து, விவசாயிகளுக்கு இணையவழியில் அடங்கல்.

பனை பொருள் வளர்ச்சி: பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 10 இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும்; 200 பனைத்தொழிலாளர்களுக்கு, மதிப்புக் கூட்டுப் பொருட்கள் பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் பயிற்சியும், உரிய கருவிகளும் ரூ. 1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

Leave your comments here...