ஞானவாபி மசூதி – இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி..!

இந்தியா

ஞானவாபி மசூதி – இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி..!

ஞானவாபி மசூதி –  இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி..!

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாக உள்ளது. இக்கோயிலின் அருகே முஸ்லிம்களின் ஞானவாபி மசூதியும் அமைந்துள்ளது. இது, முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டியதாகப் புகார்களும் உள்ளன. இதுதொடர்பான மீதான வழக்கு பல ஆண்டுகளாக வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இத்துடன், புதிதாக சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கும் தொடுக்கப்பட்டு வாராணசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கும் மசூதிக்கும் இடையிலுள்ள வளாகச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை பதிக்கப்பட்டுள்ளது.

Gyanvapi Mosque

Gyanvapi Mosque Case

பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாத இங்கு, அம்மனை தரிசிக்க அனுமதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின்போது மசூதியினுள் அறிவியல் ரீதியானக் களஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதை நடத்திய இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது 839 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. மேலும் மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் கை, கால்களை கழுவும் இடத்தில் (ஒசுகானா) சிவலிங்கம் இருப்பதும் தெரியவந்தது.

இந்த அறிக்கை வழக்கின் இருதரப்பு வாதிகளுக்கும் கடந்த 25-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், கோயிலை இடித்து மசூதி கட்டியுள்ளதாக ஏஎஸ்ஐ தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஞானவாபி மசூதியின் சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த, ஏஎஸ்ஐ இயக்குநர் (கல்வெட்டு) கே.முனிரத்னம் ரெட்டி தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது மசூதியின் சுவரில் 34 கல்வெட்டுகள் இருந்ததாகவும், அதில் 3 கல்வெட்டுகள் தெலுங்கு மொழியில் உள்ளதாகவும், சில கல்வெட்டுகள் தமிழ், கன்னடம், தேவநாகரி மொழிகளில் உள்ளதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஏஎஸ்ஐ இயக்குநர் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தான், வாரணாசி நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த உத்தரவில்,“ஞானவாபி மசூதி வளாகத்தின் முன்பு சீல் வைக்கப்பட்ட பகுதியில் இந்துகள் வழிபட அனுமதிக்கப்படுகிறது. ஏழு நாட்களுக்குள் பூஜை தொடங்கும். அனைவருக்கும் அங்கு பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு” என தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்த தீர்ப்பு குறித்துப் பேசிய மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்,“மசூதியைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட தடுப்புகளை அகற்றுவது உள்ளிட்ட வழிப்பாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏழு நாட்களில் முடிக்கப்பட வேண்டும். மேலும், விஸ்வநாதர் கோவில் பூசாரிகள் வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Leave your comments here...