ரெட் அலர்ட்.. தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

தமிழகம்

ரெட் அலர்ட்.. தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

ரெட் அலர்ட்.. தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்புப்படை குழு வருகை தர உள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கையாக குத்தாரபஞ்சன் அருவி, கன்னியாமாரன், ஓடைக்கு செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் மாலையில் 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் விமானம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

Leave your comments here...