எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு – மன்சூர் அலிகான் அறிக்கை

சினிமா துளிகள்

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு – மன்சூர் அலிகான் அறிக்கை

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு – மன்சூர் அலிகான் அறிக்கை

எனது சக திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” என நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்!எனக்காக வாதிட்ட தலைவர்கள்,  நடிகர்கள்,  ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.  எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.  கலிங்கத்துப் போர் முடிந்தது.  லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து,  அஹிம்சையை தழுவினான்.  ஆம். மனசாட்சியே இறைவன்.

திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது என காவல் அதிகாரி அம்மையார் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன்.  யதார்த்த நிலை ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம்,  மணிப்பூர்,  ஹத்ரஸ்,  பெண் பில்கீஸ் பானு,  நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன்.  திமிங்கலமாக உலா வந்தாலும்,  பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது.  இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

என் மக்கள்,  மலடான பளபளக்கும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு,  விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள்,  மலை,  ஆறு காணடிக்கப்பட்டு,  வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடற கற்க,  சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம்.  மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல், கேஸ்,  ஸ்கூல் பீஸ்,  மளிகை வாங்க என ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது.  இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால் தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும்.

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான்.  தாயின் காலடியில் சொர்க்கம்.  தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார்.  பெண்மை புனிதம்.  காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார்.  எனை ஈன்ற சபூராம்மாள் பாம்புக்கடி,  பூரான்,  தேள் கடித்து வருவோர்க்கு 8′ வேளை தொழுது,  ஓதி,  ஊதி,  கிராம்பு நீர் கொடுத்து,  நற்கிருபைகள் செய்தவர்.  சினிமா பார்க்கவிடாது 10 ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனி மேலும் இம்மண்ணின் மீட்சிக்கு,  சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!!  இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!  இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன் “ என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...