நிலுவையில் இருந்த 6 முக்கிய கோரிக்கை.. தமிழகத்திற்கு 2 புதிய ரயில்கள் – ரயில்வே வாரியம் அனுமதி!

தமிழகம்

நிலுவையில் இருந்த 6 முக்கிய கோரிக்கை.. தமிழகத்திற்கு 2 புதிய ரயில்கள் – ரயில்வே வாரியம் அனுமதி!

நிலுவையில் இருந்த 6 முக்கிய கோரிக்கை.. தமிழகத்திற்கு 2 புதிய ரயில்கள் – ரயில்வே வாரியம் அனுமதி!

2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக, தென் தமிழகத்துக்கு நிலுவையில் இருந்த 6 முக்கிய கோரிக்கைகளுக்கு ரயில் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கான புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மூன்று முதல் நான்கு வருடங்களாக நிலுவையில் இருந்தன. பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் என்றும், திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என்று ஆக.16-ல் ரயில்வே வாரியம் அறிவித்தது.

அமிர்தா விரைவு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கும் திட்டம் 2019ல் முன்வைக்கப்பட்டது. அப்போது புதிய பாம்பன் பாலம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்ததால், அமிர்தா விரைவு ரயிலை சில மாதங்களுக்கு மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டது.பாலருவி விரைவு ரயில் நீட்டிக்கப்பட்டால், தூத்துக்குடி வாழ் மக்கள் கேரளத்துக்கு நேரடியாக செல்ல ஏதுவாக இருக்கும்.

மேலும், வாரம் இருமுறை இயங்கும் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் மற்றும் கொல்லம்-திருப்பதி விரைவு ரயில்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.வேளாங்கண்ணி-எர்ணாகுளம் விரைவு ரயிலானது, திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வேளாங்கண்ணியை சென்றடையும். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் எர்ணாகுளத்தை வந்தடையும். இந்த ரயில்கள் கோட்டயம், திருவல்லா, கொல்லம், செங்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படும்.

கொல்லம்-திருப்பதி விரைவு ரயிலானது, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்தும், திருப்பதியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள் சித்தூர், காட்பாடி, சேலம், ஈரோடு, ஆலுவா, காயம்குளம் வழியாக இயக்கப்படும்.

மேலும், மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர் மற்றும் கரூர்-சேலம் ஆகிய மூன்று பயணிகள் ரயில்களை ஒன்றிணைத்து, மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு ஒரே விரைவு ரயிலாக மாற்றும் திட்டத்திற்கும் ரயில்வே வாரியத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த விரைவு ரயிலானது, மயிலாடுதுறையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும்.

புனலூர் – குருவாயூர் விரைவு ரயிலை, மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் மற்றும் செங்கோட்டை – கொல்லம் விரைவு ரயிலுடன் இணைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி மதுரையில் இருந்து புனலூர் வழியாக குருவாயூருக்கு தினசரி விரைவு ரயிலாக இயக்கப்படும். ரயில்களின் நீட்டிப்பு மற்றும் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுருக்கமாக..
* பாலக்காடு-திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும்
* திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும்
* வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (புதிய சேவை)
* கொல்லம் – திருப்பதி வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (புதிய சேவை)
* 3 பயணிகள் ரயில்களை, மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயிலாக மாற்றுதல்
* 3 பயணிகள் ரயில்களை, மதுரை – குருவாயூர் விரைவு ரயில்களாக மாற்றுதல்
* சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில்

Leave your comments here...