திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு – குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..!

இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு – குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..!

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு – குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டு இருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர் மீது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்று கொண்டு இருந்த 3 வயது சிறுவனை திடீரென சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது. பக்தர்கள் சிறுத்தை மீது கல்வீசி தாக்கியதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் மண்டலம்,போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லக்ஷிதா (வயது 6). தினேஷ்குமார் நேற்று இரவு 7.30 மணி அளவில் மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்ற போது லக்ஷிதா திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் மகளை காணாததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர். மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்தது. இதனால் சிறுத்தை தான் சிறுமியை இழுத்துச் சென்று அடித்து கொன்று இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி வட்ஷித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார். தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம், வனத்துறை சார்பில் ரூ. 5 லட்சம் என ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து திருப்பதி மலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுடன் பேசிய நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தாவது.. ” வனவிலங்கு தாக்கி சிறுமி உயிர் இழந்தது மிகவும் வருத்தத்திற்கு உரியது. அந்த சிறுமி பாதயாத்திரையாக செல்லும்போது பலமுறை தாய், தந்தையரை தவிர்த்து மலைப்பாதையில் தனியாக நடந்து சென்றது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

மலைப்பாதையில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். 500 சிசிடிவி கேமராக்களை பொருத்தி வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் சிறுத்தையா, கரடியா என்பது சரியாக தெரியவில்லை. திருப்பதி மலை நடைபாதையில் உள்ள காலிகோபுரம் முதல் நரசிம்ம சுவாமி கோவில் வரை வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

Leave your comments here...