கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக பாஜக கடும் கண்டனம்

அரசியல்

கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக பாஜக கடும் கண்டனம்

கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு  தமிழக பாஜக கடும் கண்டனம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்த, அதிமுக தலைமை சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கண்டனத்தினை தெரிவித்திருந்தார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார் அண்ணாமலையின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மாநிலத் தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக சாடினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும், இவரது இந்த போக்கு தொடர்ந்தால், பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.

மேலும் அந்த நிலைக்கு அகில இந்திய தலைவர்கள் எங்களை கொண்டு செல்ல மாட்டார்கள், பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி என பாஜக தலைவர்கள் எங்களது தலைவர்களுடன் நல்ல உறவைப் பேணுகிறார்கள். ஆனால் அண்ணாமலை மெச்சூரிட்டி இல்லாமல் தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசி வருவதற்கு டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது. கூட்டணிக்கு இடையில் பிரச்சனையை யார் உருவாக்குகிறார்கள்? அது தான் முக்கியம், நாங்கள் பாஜகவை விமர்சிப்பது கிடையாது. எங்கள் கட்சியை சீண்டும் போது தான் நாங்கள் எதிர்வினையாற்றுகிறோம். அதற்கு ஒரு எல்லை உண்டு இதற்கு மேல் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது.

அதனால், வாயை அடக்கிகொண்டு கூட்டணி தர்மத்தினை நீங்கள் கடைபிடித்தால் நல்லது, இல்லை என்றால் எங்களுக்கு இழப்பு கிடையாது. வெளிப்படையாக அம்மாவை விமர்சனம் செய்யும் போது அதிமுக தொண்டனால் அமைதியாக இருக்க முடியுமா? இதனை நாங்கள் தனிப்பட்ட முறையில் பாஜக மேலிடத்துக்கு கூறவேண்டிய அவசியமில்லை. நாங்கள் அதனால் தான் செய்தியாளர் சந்திப்பில் கடுமையாக கண்டிக்கிறோம். கூட்டணியில் அண்ணாமலையின் ரோல் எதுவும் கிடையாது, பாஜக மேலிடம் எங்களுடன் கூட்டணியில் இருக்கத்தான் விரும்புகிறது. நட்பு ரீதியாக நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை.

ஆனால் எங்களை விமர்சிப்பவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. திமுக காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் இருக்கும் போது விமர்சித்துக்கொள்கிறார்களா? இல்லை. ஆனால், அண்ணாமலை கட்டுச் சோற்றில் பெருச்சாலி போல் இருக்கிறார். இவ்வளவு நடந்த பின்னரும் அண்ணாமலை மீண்டும் வாய் அடக்கத்துடன் இல்லாவிட்டால் கண்டிப்பா வாங்கிக் கட்டிப்பார். இந்த செய்தியாளர் சந்திப்பே டெல்லி மேலிடத்துக்குத் தான், இப்படி பேசியவருடன் இணைந்து, கூட்டணி தர்மத்தில் எப்படி களத்தில் இறங்கி வேலை செய்ய முடியும்? அதிமுக அலமரம்.. பாஜக செடி என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமவை அவர்களை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுந்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநிலதலைவர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு திருஅண்ணாமலை அவர்கள் அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு புதிய திட்டங்களோடு மக்கள் வாழ்வு வளம் பெறும் களவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜெயக்குமார் அவர்கள் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார் இது போன்ற பேட்டிகளாய் பாதிப்பு உங்களுக்குத் தான் உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று (ஜூன் 11) அமித்ஷா கலந்து கொண்டது கூட ஜெயக்குமார் அவர்களுக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன். எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார்.

கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. எனவே எங்கள் மாநிலத் தலைவர் திரு-அண்ணாமலை அவர்களின் ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...