பெரியார் வழியல் தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள் – திமுக எம்பி ஆ.ராசா

தமிழகம்

பெரியார் வழியல் தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள் – திமுக எம்பி ஆ.ராசா

பெரியார் வழியல் தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள் – திமுக எம்பி ஆ.ராசா

பெரியாரின் வழியில் தனி தமிழ்நாடு கேட்கும் நிலைக்கும் தங்களை தள்ள வேண்டாம் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை வைத்துள்ளார்.

நாமக்கல்லில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு ஜூலை 3 நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா த்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் தலைப்பில் பேசினார்.

அப்போது பேசிய அவர், முதலில் கூட்டாட்சிக்கு ஒப்புக்கொண்ட நேரு , பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மாநில சுயாட்சிக்கு உருவத்தை கொடுத்தவர் அண்ணா. 1974 இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு வராமல் மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்கிற தீர்மானத்தை கருணாநிதி எழுதினார். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பினார். இந்திரா காந்தி இதை பெற்றுக் கொண்டு இதுபற்றி முழுமையாக ஆராய்வோம் என்று கடிதம் எழுதினார். ஆக மாநில சுயாட்சிக்கு கரு பேரறிஞர் அண்ணா. அந்த கருவை உருவமாக மாற்றியவர் கருணாநிதி. 1974 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த உருவத்துக்கு இன்றுவரை உயிரில்லை.

இந்திதான் நாட்டை இணைக்கும் மொழி என்றும் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் இந்தி தேவை என்று அமித்ஷா பேசுகிறார். ஒரு மொழி நாட்டை இணைக்குமா? இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை கூட அன்றைய உயர்ந்த ஜாதிக் காரர்கள், காங்கிரசார் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் பாரதம் என்ற வார்த்தையில் எனக்கு விருப்பமில்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். மத்திய அரசிடம் 97 அதிகாரம் இருக்கிறது. மாநிலங்களிடம் 47 அதிகாரம்தான் இருக்கிறது. இதுபற்றி முதன் முதலில் பேசிய இயக்கம் திமுக.

தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. தந்தை பெரியார் சாகும்வரை தனித் தமிழ்நாடு கேட்டார் . பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, ‘ இந்தியாவில் இருக்கும் வரை இந்துமதம் என்னை சூத்திரனாகவே வைத்திருக்கும். இந்தியாவில் இருக்கும் வரை இந்துமதம் என்ன பஞ்சமனாகவே வைத்திருக்கும். அதுமட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் வரை தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது. உத்தியோகத்திலே பங்கு கிடைக்காது. எனவே நான் முடிவு செய்துவிட்டேன். இன்றைக்கு திமுக ஆட்சியிலே இருக்கிறது. அவர்கள் மாநில சுயாட்சி என்று தங்களை சுருக்கிக் கொண்டார்கள். ஆனால் இளைஞர்களே சுதந்திர தமிழ்நாடு கேளுங்கள்’ என்று எழுதியுள்ளார்.

பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமருக்கு அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்’ என பேசினார்

Leave your comments here...