மெட்ரோ ரயில் திட்டத்தால் எந்த கோயில்களுக்கு பாதிப்பு இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!

தமிழகம்

மெட்ரோ ரயில் திட்டத்தால் எந்த கோயில்களுக்கு பாதிப்பு இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!

மெட்ரோ ரயில் திட்டத்தால் எந்த கோயில்களுக்கு பாதிப்பு இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கோவில் குளம் ஆகிய புராதன கோவில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.

இந்த கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலான கோவில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4 வது வழித்தடத்தில் உள்ள கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோவில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட ஏழு கோவில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் எனவும், இந்த கோவில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் கட்டுமானங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், அவை பாதுகாக்கப்படும் எனவும், வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கோவில் நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Leave your comments here...