மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது – கமல்ஹாசன் அறிக்கை

அரசியல்

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது – கமல்ஹாசன் அறிக்கை

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது  – கமல்ஹாசன் அறிக்கை

மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தின் தினசரி மின்தேவை 14,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின்உற்பத்தியாகிறது.

அனல் மின் நிலையங்கள் தடையின்றி இயங்க நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில் 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, துாத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் வெறும் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரியே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு சூழல் உருவாகலாம் என்ற அச்சம் அனைத்து தரப்பினரையும் சூழ்ந்துள்ளது.

கடந்த 2006-2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால் தமிழகத்தில் விவசாயம், தொழிற்துறை, மருத்துவசேவை கடுமையாக பாதித்தது. கோவை, திருப்பூர், கரூர், சிவகாசி தொழில்நகரங்களில் பொருளாதார சிதைவு ஏற்பட்டது. பல தொழில் நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டன. மீண்டும் அப்படி ஒரு சூழல் ஏற்படக்கூடாது.

பொருளாதார மந்தநிலை, கொரோனா,பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பண்டிகை விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வருகின்றனர். மருத்துவமனை, விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் தேவை. இச்சூழலில் மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலக்கட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது.

தமிழக அரசு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...