பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்ய பால் மறைவு – சத்குரு இரங்கல்

இந்தியா

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்ய பால் மறைவு – சத்குரு இரங்கல்

பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்ய பால் மறைவு – சத்குரு இரங்கல்

புடவை வடிவமைப்பில் பல புதுமைகளை புகுத்திய பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்ய பால் அவர்கள் தனது 79-வது வயதில் நேற்று (ஜனவரி 6) இயற்கை முறையில் காலமானார்.

மிகுந்த ஆன்மீக தேடல் கொண்ட அவர் தனது குடும்பத்தினருடன் கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 2015 முதல் முழு நேர ஆசிரமவாசியாக தங்கியிருந்தார். அவரது மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சத்ய பால் – ஆழ்ந்த ஆர்வத்தோடும் இடையறா ஈடுபாட்டோடும் வாழ ஒளிவீசும் உதாரணமாகத் திகழ்ந்தவர். இந்திய பேஷன் தொழில்துறைக்கு சத்யபால் கொண்டுவந்த தனித்துவமான தொலைநோக்குப் பார்வை, அழகான ஒரு சமர்ப்பணம். நீங்கள் எங்களுடன் இருந்தது எங்கள் பாக்கியம். இரங்கல்கள், ஆசிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1960-களில் இறுதியில் ஆடை விற்பனையில் சில்லரை வர்த்தகத்தின் மூலம் தொடங்கிய அவரது தொழில் பயணம், பின்னர், இந்திய கைத்தறி பொருட்களை ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விரிவடைந்தது. 1980-ல் இந்தியாவில் L’Affaire என்னும் பெயரில் பிரத்யேக புடவை ஆடையகத்தையை ஆரம்பித்தார். அவரது வடிவமைப்புகள் இந்திய நாட்டின் முதன்மை தரவரிசையில் ஒன்றாக இடம் பெற்றது.

கலை படைப்புகளாலும், வடிவமைப்பு சாதனைகளுக்காகவும் அவர் அறியப்பட்டாலும் அவர் ஒரு உண்மை தேடுபவராகவும் அறியப்பட்டார். 1970-களில் ஜெ.கிருஷ்ணமூர்த்தி உரைகளை கேட்க தொடங்கிய அவர், 1976-ல் ஓஷோ அவர்கள் மூலம் தீக்ஷை பெற்றார். பின்னர், 2007-ல் சத்குரு அவர்களை கண்டுணர்ந்து ஈஷா யோகா பயிற்சிகளில் தன்னை அர்ப்பணித்தார்.

Leave your comments here...