தங்கக்கடத்தல் வழக்கு : என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை – கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி.!

இந்தியா

தங்கக்கடத்தல் வழக்கு : என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை – கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி.!

தங்கக்கடத்தல் வழக்கு : என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை –  கேரளாவில் பினராயி அரசுக்கு நெருக்கடி.!

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பாக மாநில உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் நேற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.அந்நிய நாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தைப் பின்பற்றாமல், ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் மூலம் புனித குர்ஆன் நூலை உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் பெற்றது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

துாதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் உள்ளிட்டோர், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளனர். தங்கக் கடத்தல் தொடர்பாக சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறையும், இதில் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து, என்.ஐ.ஏ.,வும் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், கேரள உயர் கல்வித் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான, கே.டி.ஜலீலுக்கு, இந்த வழக்கில் தொடர்புஇருப்பதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகித்தனர். கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவுடன், அமைச்சர் ஜலீல், 53, ஜூன் மாதம் மட்டும், ஒன்பது முறை போனில் பேசியதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.விதி மீறல்இதற்கிடையே, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி, அமைச்சர் ஜலீல், ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரை பயன்படுத்தி, முஸ்லிம்களின் புனித நுாலான குரான் ‘பார்சலை’ பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின்றி, பிற நாட்டு துாதரகங்களுடன், யாரும் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி உள்ளது. இதை, ஜலீல் மீறியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், ஜலீலிடம் சமீபத்தில் விசாரணை நடத்தினர். என்.ஐ.ஏ., தரப்பிலும் விசாரணைக்கு ஆஜராகும்படி, ஜலீலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதையடுத்து, கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் நேற்று காலை ஜலீல் ஆஜரானார். ஊடகங்களின் கண்களில் படாமல் தவிர்க்கும் வகையில், காலையில், 6:00 மணிக்கு, என்.ஐ.ஏ., அலுவலகத்துக்கு ஜலீல் வந்தாலும், இது குறித்து தகவல் தெரிந்து, ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டிருந்தனர்.தங்கக் கடத்தல் மற்றும் பார்சல் இறக்குமதி குறித்து, ஜலீலிடம், அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.இதற்கிடைய, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், என்.ஐ.ஏ., அலுவலகம் முன் திரண்டு, ஜலீல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.


திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் அருகிலும், எதிர்க்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தினர். ‘பினராயி அரசே பதவி விலகு. அமைச்சர் ஜலீலை கைது செய்ய வேண்டும்’ என, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், போலீசார் கலைத்தனர். எதிர்க்கட்சியினர் மீது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தடியடியில், எதிர்க்கட்சியினர் பலர் காயம் அடைந்தனர். போலீசார் மீது, போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர்.பாலக்காட்டில் போலீசார் நடத்திய தடியடியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பலராம் உட்பட பலர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில், 12 போலீசார் காயம் அடைந்தனர்.

Leave your comments here...