கருப்பர் கூட்டத்தை கண்டித்து சுவர்களில் வேல் வரைந்து கண்டனம் தெரிவித்த சிறுமிகள் ..!

Scroll Down To Discover
Spread the love

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அது நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, முருகப் பெருமானை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யக் கோரி, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகாரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், 49; போரூர் சுரேந்தரன் நடராஜன், 36, உள்ளிட்ட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களில், செந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கருப்பர் கூட்ட யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், சாலையோர சுவர்களில் முருகனின் அடையாளமான வேலினை வரைந்து நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர். ‘கந்த சஷ்டி கவசம் குறித்து யாராவது அவதூறு பரப்பினால், வீதியில் இறங்கி போராடுவோம்’ எனவும் அக்குழந்தைகள் எச்சரித்துள்ளனர்.