அயோத்தி ராமர் கோவில் : இந்திய தங்க சங்கம் சார்பில் 34 கிலோ வெள்ளி செங்கல் நன்கொடை

Scroll Down To Discover
Spread the love

அயோத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என ராம ஜன்ம பூமி அறக்கட்டளை தலைவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 5-ந் தேதி காலை 8 மணிக்கு பூமி பூஜை தொடங்குகிறது. வாரணாசியில் இருந்து வரும் புரோகிதர்கள் பூமி பூஜை நடத்துகிறார்கள்.ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மோடியின் பயண திட்டத்தின்படி, அவர் அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.10 மணிக்குள் சுமார் 90 நிமிடங்கள் அங்கு இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் சில மத்திய மந்திரிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்குமாறு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினாய் கத்தியார் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய தங்க சங்கம் சார்பில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக 33 கிலோ 664 கிராம் எடையில் வெள்ளி செங்கல் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.இந்திய தங்க சங்கத்தின் தலைவர் அனுராக் ரஸ்தோகி இந்த வெள்ளி செங்கலை கோவில் கட்டுமான பணிகளை கவனிக்கும் அறக்கட்டளையின் உறுப்பினரான அனில் மிஸ்ராவிடம் வழங்கினார். இதேபோல் ரமடால் என்கிற அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ரூ.21, 000 நன்கொடையாக வழங்கியுள்ளது.