இராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.23 கோடி காணிக்கை.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும்.

இந்நிலையில் இராமேஸ்வரம் கோயிலில் டிசம்பர் 24ம் தேதிக்கு பிறகு நேற்று ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் ஊழியர்கள் திறந்தனர்.


பின் உண்டியல் காணிக்கையை கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் கோயில் கல்யாண மண்டபத்தில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணி, கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், கோயில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினர். இதில் 1 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 774 ரூபாயும், தங்கம் 64 கிராம், வெள்ளி 2 கிலோ 822 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இக்காணிக்கையை இணை ஆணையர் உத்தரவின் படி அரசு வங்கியில் டிபாசிட் செய்தனர்.