குமரியில் கோவில்களில் தொடரும் கொள்ளையர்கள் ஆட்டுழியம்: முத்தாரம்மன் கோவில் புகுந்து ஐம்பொன் நகைகள் கொள்ளை..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையில் இருந்து மணக்குடி செல்லும் மெயின் ரோட்டில் மதுசூதனபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்

நேற்று வழக்கம் போல் அதிகாலை கோவில் நடையை பூசாரி விஜயகுமார் திறக்க வந்தார். அப்போது கோவிலின் மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊர் தலைவர் வடிவேலுவுக்கு தகவல் கொடுத்தார். அவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவில் உள்ளே சென்று பார்த்தனர்.

https://youtu.be/UuYj3GrTu6E

அப்போது மூலஸ்தானத்திலேயே ஒரு அறை உள்ளது. அதில் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த பட்டுப்புடவைகள், பூஜை பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதில், கோயிலில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், அம்மனுக்கு அணிவிக்கப்படும் ஐம்பொன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இந்த கோவிலில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் உள்ளே நுழைவதும், பீரோவை உடைத்து நகைகளை திருடும் காட்சியும் பதிவாகி உள்ளது. பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து, கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.