முகநூலில் எஸ்ஐ வில்சன் குறித்து, அவதூறு கருத்து : காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை.!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் தவுஃபீக், அப்துல் சமீம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்ததால், பழிதீர்ப்பதற்காக எஸ்.எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக, தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரை கைது செய்ததுடன், வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாக மெஹபூப் பாஷாவையும் , பெங்களூருவில் கைது செய்தனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அப்துல் சமீம் மீது தீவிரவாதி என எஸ்.எஸ்.ஐ. வில்சன் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதனால் சமீம் தீவிரவாதியாக மாறியதாகவும் நவாஸ் ஷாகுல் என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து, தேங்காய்பட்டிணத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்  நவாஸ் ஷாகுலை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.!