பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு பால், தேநீர், தயிர் உள்ளிட்டவற்றை வழங்கி உதவிய சிறுவனுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதினை வழங்கினார்.
சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் இரண்டு இளைய மகன்களான ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26 -ம் தேதி வீர பாலகர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீரத்துடனும் விவேகத்துடனும் சாதனைகள் புரிந்த சிறுவர்களுக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இவ்விருதினை குடியரசு தலைவர் இன்று வழங்கினார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பூங்காவில் மின்சாரம் தாக்கிய 6 வயது சிறுவனை காப்பாற்ற முயன்று உயிரிழந்த 8 வயது சிறுமி வயோமா பிரியாவுக்கும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு பால், தேநீர், தயிர் உள்ளிட்டவற்றை வழங்கி உதவிய சிறுவனுக்கும் பிரதமரின் தேசிய பாலர் விருது வழங்கப்பட்டது.
வயோமா பிரியாவுக்கான விருதை அவரது அம்மா அர்ச்சனா சிவராம கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவன், தானே நேரில் வந்து விருதை பெற்றுக்கொண்டார். விருது பெற்றது குறித்துப் பேசிய அச்சிறுவன், ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியபோது எங்கள் கிராமத்துக்கு ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். தினமும் அவர்களுக்கு பால், தேநீர், மோர் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்வேன். விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் கனவிலும் நினைத்ததில்லை’’ என தெரிவித்தார்.

Leave your comments here...