ரத்தன் டாடாவின் தேசபக்தி கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பிரகாசமாக வழி காட்டியது – பிரதமர் மோடி புகழாரம்..!

Scroll Down To Discover
Spread the love

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய தொழில்துறைக்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு என்றென்றும் ஊக்கமளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று காலமானார். அவரது உடலுக்கு அக்டோபர் 10-ஆம் தேதியன்று முழு அரசு மரியாதை செலுத்தபட்டது. இந்நிலையில், அவர் பிரிந்து ஒரு மாதங்கள் கடந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கட்டுரை வடிவில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை பற்றி நினைவூட்டியுள்ளார்.

அதில்,

இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஓர் உத்வேகம், கனவுகளை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டும் ஆளுமை. வெற்றி என்பது இரக்கம் மற்றும் பணிவுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை நினைவூட்டுபவர். அவரது தலைமையிலான டாடா குழுமம்உலக அளவில் புதிய உயரங்களுக்கு சென்றபோதிலும், அவர் தனது சாதனைகளைப் பணிவுடனும் கருணையுடனும் எளிதாக ஏற்றுக்கொண்டார்.

மற்றவர்களின் கனவுகளுக்கு ஆதரவு அளிப்பது ரத்தன் டாடாவின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும். அண்மை ஆண்டுகளில், இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்புக்கு வழிகாட்டியாகவும், பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளில் முதலீடு செய்பவராகவும் அவர் அறியப்பட்டார். இளம் தொழில்முனைவோரின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் அவர் புரிந்துகொண்டார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அவர்களின் திறனை அங்கீகரித்தார். இது புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு கலாச்சாரத்தை உருவாக்குவதில் முக்கியபங்கு வகித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் உலக அரங்கில் முன்னுதாரணமிக்கவையாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தத் தொலைநோக்குப் பார்வை, உலகத் தரத்திற்கு ஒப்புமை உடையதாக இந்தியாவை உருவாக்க ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.அவரது மகத்துவம், சக தொழிலாளர்கள், சக மனிதர்களுக்கு உதவுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவரது கருணை அனைத்து உயிர்களுக்குமாக விரிவடைந்தது.

விலங்குகள் மீதான அவரது ஆழ்ந்தஅன்பு நன்கு அறியப்பட்டது. விலங்குகள் நலனை மையமாகக் கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் அவர் ஆதரித்தார். உண்மையான தலைமைத்துவம் என்பது ஒருவரின் சாதனைகளால் மட்டுமல்ல, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்துக் கொள்ளும் ஒருவரின் திறனாலும் அளவிடப்படுகிறது என்பதை அவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் நினைவூட்டுவதாக அமைந்தது.

நெருக்கடியான காலங்களில் ரத்தன் டாடாவின் தேசபக்தி கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பிரகாசமாக வழி காட்டியது. 26/11 தீவிரவாத தாக்கு தலுக்குப் பின் மும்பையில் உள்ள புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலை, அவர் மீண்டும் திறந்தார். இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது, தீவிரவாதத்துக்கு அடிபணிய மறுக்கிறது என்று ஓர் அறை கூவலாக அது அமைந்தது. பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாகப் பணியாற்றினோம். அங்கு அவர் விரிவான முதலீடுகளை செய்தார். சில வாரங்களுக்கு முன், ஸ்பெயின் அதிபர் பெட்ரோசான்செஸுடன் நான் வதோதராவில் இருந்தேன்.

இந்தியாவில் சி-295 ரக விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலை வளாகத்தை நாங்கள் கூட்டாகத் தொடங்கி வைத்தோம். ரத்தன் டாடாதான் இதற்கான பணிகளைத் தொடங்கினார். ஆனால், இந்நிகழ்ச்சியில் ரத்தன் டாடாவின் வருகை இல்லாதது பெரும்குறை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ரத்தன் டாடாவை நான் கடிதங்களின் நாயகர் என்ற முறையில் நினைவுகூர்கிறேன். அரசு நிர்வாகம் குறித்து, அரசின் ஆதரவைப் பாராட்டி வாழ்த்து தெரிவிப்பது, தேர்தல் வெற்றிகளுக்குப் பின் வாழ்த்துகளை அனுப்புவது என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் அடிக்கடி எனக்கு கடிதம் எழுதுவார். நான் மத்திய அரசுப் பொறுப்புக்கு சென்ற பின்பும் எங்களின் உறவு தொடர்ந்தது. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சி களில் அவர் ஓர் உறுதி யான பங்குதாரராக இருந்தார்.

குறிப்பாக, தூய்மை இந்தியா இயக்கத்துக்கு ரத்தன் டாடா அளித்த ஆதரவு என் இதயத்துக்கு நெருக்கமானது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தூய்மை, சுகாதாரம், துப்புரவு ஆகியவை இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டு, இந்த வெகுஜன இயக்கத்துக்குக் குரல் கொடுப்பவராக அவர் இருந்தார்.

அவரது இதயத்துக்கு நெருக்கமான மற்றொரு செயல் மருத்துவம். குறிப்பாக புற்றுநோய்க்கு எதிரான போராட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அசாமில் பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாங்கள் இணைந்து தொடங்கி வைத்ததை நினைவுகூர்கிறேன். அந்த நிகழ்வில் அவர் ஆற்றியஉரையில், தனது இறுதி ஆண்டுகளைமருத்துவத்துக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாகக் கூறியிருந்தார். புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவுடையதாக மாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிக முக்கியமானவையாகும்.

இன்று அவரை நாம் நினைவுகூரும்போது, அவர் கற்பனை செய்த சமூகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தசமூகத்தில் வணிகம் நன்மைக்கான சக்தியாக செயல்பட முடியும்; அந்தசமூகத்தில் ஒவ்வொரு தனிநபரின் திறனும் மதிப்புக்குரியது; அந்த சமூகத்தில் முன்னேற்றம் என்பது மக்களின் நல்வாழ்வாலும் மகிழ்ச்சியாலும் அளவிடப்படும். அவர் வளர்த்தெடுத்த கனவுகளின் வழியே அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். இந்தியாவை சிறந்த, கனிவான, நம்பிக்கையான இடமாக மாற்றியதற்காக தலைமுறைகள் அவருக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.  எனக் குறிப்பிட்டிருந்தார்.