குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் – 28-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள நிலையில்,  வரும் 28ம் தேதி பிரதமர்  மோடி தூத்துக்குடிக்கு வருகை தந்து அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும்,  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.  பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும்,  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும்.

நிலையான காலநிலையும்,  நல்ல வெளிச்சம்,  குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.  அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது.  குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது.  குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும்.

இதைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம் அருகே,  கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு,  கையகப்படுத்தப்பட்டு உள்ளது.   சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் 8 வட்டாட்சியர்கள் தலைமையில் கையகப்படுத்தும் பணி நடந்தது.  இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலம்,  மீதம் உள்ளவை பட்டா நிலம்.

கடந்த 2022-ம் ஆண்டு இஸ்ரோ தலைவர் சோம்நாத் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி சென்றிருந்தார்.  பின்னர் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மைய விஞ்ஞானிகள்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் கூடல்நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகின்ற 28 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி  கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.  பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகம்,  தூத்துக்குடி கடல் பகுதி,  ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையில் கடற் பகுதியில் கடலோர காவல் படை, கப்பற்படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை பலப்படுத்தியுள்ளனர்.