கனமழை – ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடக்கம் : 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!!

Scroll Down To Discover
Spread the love

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க 13 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. மீட்கப்படும் பயணிகள் பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட உள்ளனர். மீட்கப்படும் பயணிகளுக்காக வாஞ்சி மணியாச்சியில் இருந்து சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட இடம் மழை வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது. இதனால் ரயிலில் சுமார் 800 பயணிகள் சிக்கித் தவித்தனர்.

அவர்களில் சுமார் 300 பேர் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.சுமார் 500 பேர் ரயில் நிலையத்திலேயே தவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று நிவாரணப்பொருட்களுடன் இங்கு கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் இன்று காலை 5 மூட்டைகளில் உணவுப்பொருட்கள் வழங்கும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு மூலம் பயணிகள் ஒவ்வொருவராக மீட்கப்படுகின்றனர் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் சிக்கி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தார். தற்போது வரை கர்ப்பிணி அனுசுயா, ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.