ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Scroll Down To Discover
Spread the love

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேநேரம், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கான நேரம், வயது தொடர்பாக அரசு, விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன

தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் செல்லுபடியாக கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும். திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேநேரம், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கான நேரம், வயது தொடர்பாக அரசு, விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6-ம் தேதி ஆளுநர் அந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ம் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு மறுநாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

தண்டனை என்ன? – இந்த சட்டத்தின்படி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால், 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.