தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது : எனக்கு அதில் உடன்பாடு இல்லை – அண்ணாமலை

Scroll Down To Discover
Spread the love

பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் தற்போது ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்ளும் போக்கே கடந்த சில நாள்களாக நிலவுகிறது. இந்நிலையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை; கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி குறித்து பேசும் நேரம் விரைவில் வரும். தேர்தலை சந்திக்கும் விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள் நான் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது நல்லதுதான். எனது நிலைப்பாட்டில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும் 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது.

இன்றைக்கு தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆளுங்கட்சியாக இருந்தால் இவ்வளவு, எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறியிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 2 ஆண்டுகள் தலைவராக இருந்த அனுபவத்தில் பேசுகிறேன். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். அரசியல் களத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.