ஜல் ஜீவன் திட்டம் – சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு தமிழகத்திற்கு, மத்திய அரசின் விருது..!

Scroll Down To Discover
Spread the love

ஜல் ஜீவன்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கும், ஊரக சுகாதாரத்தில் முன்னேற்றம் அடைந்ததற்காகவும், தமிழகத்திற்கு, மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, 69.14 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விருதை, டில்லியில் நேற்று நடந்த துாய்மை பாரத விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பெற்றுக் கொண்டார். இதேபோல, ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை வாயிலாக, ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் குறித்து அளவீடு செய்யப்படுகிறது.

அதன்படி, 2021- – 22ம் ஆண்டு தேசிய அளவில், ஊரக சுகாதாரத்தின் தரத்தில், தமிழகத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ஜனாதிபதியிடம் இருந்து, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.