2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, கடந்த 2021 நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்துக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில், தீபத்தை தொடர்ந்து வந்த பவுர்ணமி நாளிலும் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபட்டனர். அதன் பிறகு, கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்த தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி) பவுர்ணமி நாட்களான வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.