இந்திய கடற்படையின் 25-வது தலைமை தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரி குமார் பொறுப்பேற்பு

Scroll Down To Discover
Spread the love

இந்திய கடற்படையின் 25-வது தளபதியாக அட்மிரல் ஆர்.ஹரி குமார் நவம்பர் 30-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார். அட்மிரல் கரம்பீர் சிங் 41 ஆண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பொறுப்பை ஏற்று கொண்டார்.

அட்மிரல் ஆர்.ஹரி குமார் பெருமைமிக்க கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் பழைய மாணவராவார். அவர் 1983-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்திய கடற்படையில் சேர்ந்தார். 38 ஆண்டுகளுக்கும் மேல் பரந்த அனுபவம் பெற்றுள்ள அவர், கடலோர காவல்படையின் பல்வேறு கப்பல்களுக்கு தலைமை பொறுப்பை வகித்துள்ளார்.

மேலும் விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் கப்பலின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார். வெளிநாடுகளின் கடற்படையின் ஆலோசகராகவும், சோமாலியாவின் ஐ.நா. மிஷனிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு மும்பையில் உள்ள மேற்கு பிராந்திய கடற்படை கமாண்டின், பிளாக் ஆபிசர் கமாண்டிங் இன் சீப்- ஆக பொறுப்பு வகித்தார்.