இந்தியா-ரஷ்யா கடற்படை கூட்டு பயிற்சியில் ஐஎன்எஸ் தபார் பங்கேற்பு.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியா, ரஷ்யா கடற்படை இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைப்பெறும் ‘இந்திரா கடற்படை’ 12வது கூட்டு பயிற்சி பால்டிக் கடலில் கடந்த 28ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது.

இந்த கூட்டு பயிற்சி முதன் முதலில் கடந்த 2003ம் ஆண்டு தொடங்கியது. இந்த கூட்டு பயிற்சி இரு நாட்டு கடற்படைகள் இடையேயான நீண்ட கால யுக்தி கூட்டுறவை எடுத்துக் காட்டுகிறது. ரஷ்ய கடற்படையின் 325 ஆண்டு விழாவில் பங்கேற்க ஐஎன்எஸ் தபார் போர்க்கப்பல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றது. அதன் ஒரு பகுதியாக இந்திரா கடற்படை-21 பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

ரஷ்ய கடற்படை சார்பில் ஆர்.எஃப்.எஸ் ஜெலியோனி டால் மற்றும் ஆர்.எஃப்.எஸ் ஓடிண்ட்சோவோ ஆகிய போர்கப்பல்கள் பங்கேற்றன.

இரண்டு நாட்கள் நடந்த கூட்டு பயிற்சியில் வான் தாக்குதலை முறியடிப்பது, கப்பல்கள் இடையே சரக்கு பரிமாற்றம், எரிபொருள் பரிமாற்றம், ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உட்பட பல பயிற்சிகள் மேற்கொளளப்பட்டன.

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட, இந்த கடற்படை கூட்டு பயிற்சி, பரஸ்பர நம்பிக்கை, இயங்குதன்மை, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை வலுப்படுத்த உதவியது. இருநாட்டு கடற்படைகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதில் இந்த கூட்டுபயிற்சி மற்றொரு மைல்கல் சாதனை மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்பை மீண்டும் உறுதி செய்துள்ளது.