கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் தகவல்களை இணையதளத்தில் பதியுமாறு மாநிலங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, “பால் ஸ்வராஜ் (கொவிட்-பராமரிப்பு இணைப்பு)” எனும் கண்காணிப்பு இணையதளத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியுள்ளது.

ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் நலனை தாமதமின்றி உறுதி செய்வதற்காக ஆணையத்தின் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதியுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதோடு, குழந்தைகளுக்கான நலத் திட்டங்களுக்கு அதிக நிதி உதவி தேவைப்படும் மாநிலங்களையும் கண்டறிய முடியும்.

இது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கான பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிரப்பட்டுள்ளன.தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டபூர்வ அமைப்பாகும்.