பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளிடம் ஆன்லைனில் பாலியல் அத்துமீறல் – ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.!

Scroll Down To Discover
Spread the love

பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாணவிகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்க அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையருக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுன் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.